
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1, 2025 முதல் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் (EOL Vehicles) மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்கள் பொதுஇடங்களில் காணப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். மேலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹10,000 அபராதமும், இரு சக்கர வாகனங்களுக்கு ₹5,000 அபராதமும் விதிக்கப்படும் என CAQM (Commission for Air Quality Management) அறிவுறுத்தியுள்ளது.
EOL வாகனங்கள் எரிபொருள் நிலையங்களில் அல்லது சாலையோரங்களில் காணப்பட்டால், அவை அந்த இடத்திலேயே பறிமுதல் செய்யப்படும். இதற்காக டெல்லி முழுவதும் உள்ள சுமார் 500 பெட்ரோல் பங்குகளில் ANPR (Automatic Number Plate Recognition) கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள், வாகன எண் தகடுகளை படித்து, வாகனத்தின் வயதைக் கணிக்கின்றன. காலாவதியான வாகனமாக இருந்தால், பம்ப் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பெட்ரோல் வழங்கப்படாது. அதுமட்டுமின்றி, அந்த வாகனத்தின் விவரங்கள் அமலாக்க அதிகாரிகளுக்கு அனுப்பி, பறிமுதல் நடவடிக்கைக்கு வழிவகுக்கப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நேரடியாக வாகன ஸ்கிராப்பிங் வசதிக்கு (RVSF) அனுப்பப்படும். உரிமையாளர்கள், வாகனத்தை டெல்லி மாநிலத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல விரும்பினால், மறுபயன்பாடு சான்றிதழ் (NOC) ஒன்றை பெற்று, ஒரு ஆண்டுக்குள் நகர்த்த வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த நடைமுறை, ஜூலை 1, 2025 முதல் டெல்லியில் அமலுக்கு வருகிறது. டெல்லியை ஒட்டியுள்ள NCR-ன் ஐந்து மாவட்டங்களில் – குருகிராம், ஃபரிதாபாத், காஜியாபாத், கௌதம் புத்த நகர், சோனிபட் – நவம்பர் 1 முதல் இதே நடைமுறை அமல்படுத்தப்படும்.
CAQM பகிர்ந்த தரவுகளின்படி, தற்போது டெல்லியில் 62 லட்சம் EOL வாகனங்கள் உள்ளன. இதில் மட்டும் 41 லட்சம் இரு சக்கர வாகனங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. NCR மாவட்டங்களில் கூடுதல் 44 லட்சம் பழைய வாகனங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மாசுக்கட்டுப்பாடு என்ற தலைப்பில், EOL வாகனங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தடைசெய்யும் நடவடிக்கை முதன்மையாகப் போடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் டெல்லி மற்றும் NCR பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது முக்கிய நோக்கமாகும். உரிமையாளர்கள் விழிப்புடன் செயல்பட்டு, தங்கள் வாகனங்களை முறையாக மாற்றம் செய்யும் பக்கம் செல்ல வேண்டியது அவசியமாகும்.