கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி  இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதுவரை 240 பேரை காணவில்லை என்று கூறப்படுவதால் அவர்களை தேடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் 25 தமிழர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சூழல் மலை மற்றும் முண்டகை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடி பெயர்ந்தவர்களில் 22 பேரும், தமிழகத்திலிருந்து சென்ற மூன்று பேரும் மாயமாகியுள்ளனர். மோப்பநாய் உதவியுடன் அவர்களைத் தேடும் பணியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி வீடுகளை இழந்த 130 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர்.