
வந்தவாசி அருகே ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ் வெள்ளியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 72 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டிடம் இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் மாணவர்கள் இன்று பள்ளிக்கு செல்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக துணி பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.