தமிழக முழுவதும் ஆன்லைன் மூலம் கட்டட அனுமதியை உடனே வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாகும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 2500 சதுர அடி வரை கட்டடப்பட உள்ள கட்டடங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். கட்டடப் பணி நிறைவடைந்ததும் முடிவு சான்றும் பெற வேண்டியதில்லை. உடனடியாக அனுமதி பெற இதற்கான இணையதளத்தை அணுகலாம்.

ஆன்லைனில் கட்டட உரிமையை பெறும் புதிய திட்டத்தின் கீழ் சுயசான்று அடிப்படையில் 2500 சதுர அடி நிலத்தில் 3500 சதுர அடி கட்டடத்திற்கு ஒற்றை சாளர முறையில் உடனடி உரிமை அளிக்கப்படும். இதற்கு தரைத்தளம் அல்லது மாடியுடன் கூடிய கட்டட உயரம் ஏழு மீட்டர் உயரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். உடனடி கட்டுமான வேலைக்கு எதுவாக முன் இடங்கள ஆய்வு மற்றும் கட்டிட முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுயசான்று அடிப்படையில் ஆன்லைன் முறையில் உடனடி கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டண விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிகளில் சதுர அடிக்கு எவ்வளவு கட்டணம் என்பதை பார்க்கலாம். சென்னை 100 ரூபாய், கோவை, திருப்பூர் மற்றும் மதுரைக்கு 88 ரூபாய், சேலம் மற்றும் திருச்சிக்கு 84 ரூபாய், நெல்லை, வேலூர், தூத்துக்குடி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு 79 ரூபாய் , தஞ்சை, நாகை, ஓசூர், கடலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் 74 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.