ஔரங்காபாத் மாவட்டத்தில், மே 16 ஆம் தேதி மூன்று சிறுமிகள் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஃபிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 14, 13, 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகள் வங்கியில் கணக்கு தொடங்கச் செல்லும் பெயரில் வீட்டை விட்டு புறப்பட்டு, வீடு திரும்பாததால், அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். உடனே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதும், உடனே விசாரணை தொடங்கப்பட்டது.

மூன்று பேரும் ஒரே நேரத்தில் காணாமல் போனதால், கிராம மக்கள் குழந்தைகள் கடத்தல், விற்பனை உள்ளிட்ட பல்வேறு ஊகங்களை வெளியிட்டனர். குடும்பத்தினர் பெரும்கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறுமிகள் காணாமல் போன ஒரு மாதத்திற்குப் பிறகு, பாட்னாவின் மிதாபூர் பகுதியில் இருந்த ஒரு வாடகை வீட்டில், அவர்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில், இந்த மூவரும் பள்ளி தோழிகள் என்பதும், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் ரீல்கள் உருவாக்கும் ஆர்வத்தால் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதும் தெரியவந்தது.

சிறுமிகள், பாட்னாவில் தனியாக வசித்து வந்த மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து நடனம், நடிப்பு பயிற்சி பெற விரும்பியதாகக் கூறியுள்ளனர். கூகுளில் ஒரு இசை ஸ்டுடியோவை தேடி அந்த நகரத்திற்கு சென்றதோடு, ஒரு ஸ்டுடியோ ஆபரேட்டரின் அறிவுரையின்படி பயிற்சி எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பெண் எஸ்ஐ சோனாலி குமாரியின் தலைமையில் முழு விசாரணை நடைபெற்றது. போலீசார் தொடர்ந்து எடுத்த முயற்சியில், சமூக ஊடகங்களில் வைரலான ஒரு ரீலில் பைக்குடன் இருந்த சிறுமிகளை அடையாளம் கண்டுபிடித்ததோடு, அந்த பைக்கின் பதிவுகள் வழியாக உறுதியான தகவல்களைக் கண்டறிந்து மீட்பு செயலை மேற்கொண்டனர்.

ஜூன் 20 ஆம் தேதி, மூவரும் பாதுகாப்புடன் ஔரங்காபாத் அழைத்து வரப்பட்டனர். ஜூன் 21ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்குப் பின், அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் எந்தவொரு அசம்பாவிதமும் நடந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சம்பவம், சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகள் எந்த அளவிற்கு பாதிக்கப்படலாம் என்பதற்கு ஓர் எச்சரிக்கையாகவும், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.