
குஜராத் மாநிலம் அகமதாபாத்- வாரணாசிக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இந்த ரயில் வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்றது. அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரயில் விபத்துக்குள்ளானது. அதனால் ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டது.
ஆனால் இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ரயில் சென்று கொண்டிருக்கும் போது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மர்ம பொருள் மீது மோதியதால் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது என்றும் இந்த விபத்து அதிகாலை 2.35 மணி அளவில் நடந்தது என்றும் கூறி இருக்கிறார்.
அதே சமயம் விபத்து நடந்த இடத்தில் வெளிநாட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து சதி வேலை காரணமாக இருக்கலாம் என்றும் ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் விபத்து உருவாக காரணமாக இருந்த மர்ம நபர்களை தேடும் பணி அதி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.