சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30 இணைக்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சீர்வரிசைகளை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 30 இணையர்களுக்கு திருமணத்தை உங்கள் முன்னிலையில் நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மிக மிக முக்கியமான நாள் இன்று. காதலர் தினத்தை சிலர் கொண்டாடக்கூடாது என்று கூறுவார்கள். காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா? இங்கு இருக்கக்கூடிய ஜோடிகள் அனைவரும் நல்ல காதலர்கள் ஆகவும் நண்பர்களாகவும் தங்கள் வாழ்வில் பயணிக்க வேண்டும்.

இங்கு உள்ள மணமக்கள் பலர் பட்டதாரிகளாக உள்ளனர் என்பது திராவிட மாடலின் பெருமை. ஒட்டுமொத்த தமிழ்நாடும் கல்வியில் சிறந்து விளங்குகின்றது. வீடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி மணமக்கள் வீட்டை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். நாட்டைக் காக்க முதல்வர் இருக்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இலவச பேருந்து பயணம் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் மாதம் தோறும் குறைந்தபட்சம் 900 ரூபாயை சேமிக்கின்றனர். முதலமைச்சரின் அறிவுரையைப் பெற்று இன்னும் மூன்று மாதங்களில் அதிகமான மகளிருக்கு  உரிமை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.