
அமைச்சர் ஐ. பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் வலதுசாரிகள் ஒரு பக்கமும் இடதுசாரிகள் ஒரு பக்கமும் இருக்கும் நிலையில் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகம் கூறியது போல் எந்த திட்டம் நிறைவேறாமல் இருக்கிறது என கூறினால் அதனையும் நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார் என்றார்.
அதன்பிறகு திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் விலகப்போவதாக மத்திய இணை மந்திரி எல். முருகன் கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது, அது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். கண்கள் தெரியும் போதே தண்ணீர் இல்லாத பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள். தண்ணீர் இருந்தால் குதிக்கலாம் தண்ணீர் இல்லாமல் எப்படி குதிக்க முடியும். கடந்த ஆறு முறை திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ஏழாவது முறையும் கண்டிப்பாக ஆட்சி அமைப்போம். இதுவரை ஆட்சியில் யாரும் பங்கு கேட்டது கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி தான் வெல்லும். அதன் பிறகு கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பது குறித்த கேள்விக்கு, நான் சாப்பிட வேண்டும் என்றால் எனக்கு மூன்று பரோட்டாக்கள் வைத்தால் சாப்பிட முடியாது. 2 அல்லது மூன்று இட்லிகள் தான் சாப்பிட முடியும். மேலும் அவரவர் தகுதிக்கு ஏற்றது போன்று கடந்த காலங்களில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோ அதன் அடிப்படையில் கூட்டணி பங்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறினார்.