தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று தலைமைச் செயலக வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் இன்று சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரம் வாசித்தது மட்டும்தான் திமுகவின் சாதனை. இது விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என கூறினார். இதனையடுத்து செங்கோட்டையன் உங்களை ஏன் தவிர்க்கிறார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி அவரை போய் கேளுங்கள். தனிப்பட்ட முறையில் இருக்கும் பிரச்சினை குறித்து கேள்வியை இங்கு கேட்க வேண்டாம். அவரிடம் கேட்டால் தான் காரணம் தெரியும் என காட்டமாக பதில் கூறியுள்ளார். கடந்த மாதம் கோவையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காமல் போனது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை  சந்திப்பதை தவிர்த்து அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஐந்து பேர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைக்குள் கடம்பூர் ராஜா, கே.பி அன்பழகன், எஸ்.பி வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் என 5 முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து செங்கோட்டையன் அருகே சென்று அமர்ந்து சமாதானம் பேசியுள்ளனர்.