தமிழக பாஜக கட்சியின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் மாவட்டத்திலிருந்து முதல் முறையாக ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவருக்கு திருநெல்வேலியில் உற்சாக வரவேற்பு செல்லும் இடமெல்லாம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்து வரும் தேர்தலில் பாஜகவை 40 இடங்களில் வெற்றி பெற வைப்பேன் என்று அவர் உறுதி கொடுத்துள்ள நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்!

ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்!

ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் அவல முதல்வர் ஸ்டாலினின்  ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!

இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது!

முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது!

இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்!

பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே!

இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது! என்று பதிவிட்டுள்ளார்.