ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் ஆரேப்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் சார்பில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி தேடி வந்தது என்றும் ஆனால் அவர் அந்த பதவியை மறுத்துவிட்டு ஒரு சிறிய மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பதவி போதும் என்று கூறி இங்கு அமர்ந்திருப்பதாக கூறினார்.

அதாவது மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜப்பார் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, தற்போது கவுன்சிலர் பதவிக்கு கூட சிபாரிசு தேவைப்படுகிறது. ஆனால் செங்கோட்டையனுக்கு முதலமைச்சர் பதவியே தேடி வந்தது. ஆனால் அவர் அதனை மறுத்துவிட்டு தனக்கு மாவட்ட செயலாளர் பதவியே போதும் என்று கூறிவிட்டார். இதனால் அவர் சந்தோஷமாக இருப்பதோடு கவலை இல்லாமல் படுத்தவுடன் தூங்குகிறார். மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்காக சேவை ஆற்றிய அதிமுக கட்சி தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்று கூறினார்.

மேலும் சமீப காலமாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே மோதல் போக்கு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர். சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் செங்கோட்டையன் மற்றும் இபிஎஸ் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இதனால் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி தேடி வந்தது என்று அதிமுக நிர்வாகி கூறிய  கருத்து அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.