
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தன்மயா(17). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மூன்றாம் தேதி வெளியே சென்ற தன்மையா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தன்மயாவை தேடி வந்தனர். கடந்த 7-ஆம் தேதி அனந்தபுரம் பெல்லாரி தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரது உடலில் தீக்காயங்கள் இருந்தது. அந்த பெண்ணின் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். தன்மயாவுடன் மூன்று வாலிபர்கள் நண்பர்களாக பழகினர்.
அதில் ஒருவர் காதலிக்குமாறு கூறி தன்மயாவை தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் தன்மயா கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. எனவே அந்த மூன்று வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.