கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் மகேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வரும் நிலையில் இவரிடம் ஒரு ஏழாம் வகுப்பு மாணவியும் அவருடைய சகோதரரும் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சம்பவ நாளில் வழக்கம்போல் அவர் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாடம் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஏழாம் வகுப்பு மாணவியை மட்டும் தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி பதற்றம் அடைந்து கத்தி கூச்சலிட்ட நிலையில் அந்த மாணவியின் சகோதரர் உடனடியாக அறைக்குள் சென்று பார்த்தார். தன் தங்கையிடம் ஆசிரியர் அத்துமீறியதை பார்த்ததும் கோபத்தில் சகோதரர் அவரிடம் தகராறு செய்ததோடு பின்னர் வீட்டிற்கு சென்று தன் தாயாரிடம் நடந்த விவரங்களை கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து மகேஷை கைது செய்தனர். இதில் மகேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.