
சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கனகராஜ் தோட்டத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(32). இவர் சூளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது தாய் சுகுணாவுடன் வசித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாயிடம் தகராறு செய்து வந்தார். மேலும் அடிக்கடி மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என சுகுணாவை பயமுறுத்தி வந்துள்ளார்.
ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற ராமதாசை அவரது குடும்பத்தினர் காப்பாற்றினர். அடிக்கடி ராமதாஸ் இப்படி செய்து வருவதால் அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் விழுப்புரத்தை சேர்ந்த ஒரு பிரியா என்ற பெண்ணை ராமதாசுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் பிரியாவுக்கு திடிரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த மே 8-ம் தேதி பிரியா தன்னுடைய மாமியாருடன் ராமதாஸின் அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து பிரியா சிகிச்சை பெற்று வந்ததால் புளியந்தோப்பு பகுதியில் ராமதாஸ் மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராமதாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அங்கு சென்ற ராமதாஸின் அக்கா அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என ராமதாஸ் அடிக்கடி மிரட்டி வந்ததாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ராமதாஸுக்கு திருமணம் ஆனது. இந்த நிலையில் ஏன் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.