
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமைந்துள்ள தேக்கல்பட்டி ஏரிக்கரையைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி (52) மீது, தன் மருமகள் மற்றும் பேரனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்புசாமி மற்றும் அவரது மனைவி லட்சுமிக்கு மாதேஷ் (29), சுரேஷ் (27) மற்றும் பரமேஸ் (24) என்ற 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் சுரேஷ், மந்தகாடு பகுதியில் தனது மனைவி அனிதா (25) மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை சர்வபுத்திரனுடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று, குப்புசாமி மது போதையில் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இதைக் கண்ட அனிதா, மாமியாருக்கு ஆதரவாக தலையிட்டு தகராறு செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த குப்புசாமி, அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் அனிதா மற்றும் அவரது குழந்தை மீது சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் இருவரும் காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அனிதாவை வாழப்பாடி தனியார் மருத்துவமனையில், மற்றும் குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
குப்புசாமியின் மனைவி லட்சுமியும் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான குப்புசாமியை தேடி வலைவீசி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.