
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட விஜய் பேசியதாவது, நாம் யாரு. நாம் எவ்வளவு ஸ்ட்ராங் என்பதை எல்லாம் சும்மா வாயால் சொல்லக்கூடாது. அதை செயலில் காட்டி நிரூபிக்க அரசியலில் என்ன ஸ்டாண்டர்ட் எடுக்க போகிறோம் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டியது தான் நமது கடமை. என்னது பெரியார் தான் உங்க கொள்கை தலைவரா என ஒரு கூட்டம் நம்மை கேட்டு கொண்டு ஒரு பெயிண்ட் டப்பாவை தூக்கிக் கொண்டு செல்வார்கள். அந்த பெயிண்ட் டப்பா பிசினஸுக்கு நான் அப்புறம் வரேன். ஆமாம் பெரியார் எங்கள் கொள்கை தலைவர்.
ஆனால் பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்க போறது இல்லை. எங்களுக்கு அது உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி பகுத்தறிவு சிந்தனை என பெரியார் சொன்ன அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம். பெரியாருக்கு பிறகு எங்கள் கொள்கை தலைவர் பச்சை தமிழர் பெரும் தலைவர் காமராஜர். இந்த மண்ணில் மதசார்பின்மைக்கும் நேர்மையான நிர்வாக செயல்பாடுகளுக்கும் முன்னுதாரணமாக இருந்தவர் காமராஜர்.
அவரையும் எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். அண்ணல் அம்பேத்கர் இந்த துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கி காட்டியவர். இந்தியாவில் அம்பேத்கர் பெயரை கேட்டால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்துவர்கள் எல்லாம் நடுங்கிப் போவார்கள். அவரையும் எங்கள் வழிகாட்டியாக சொல்வதில் பெருமைப்படுகிறோம். பெண்களை கொள்கை தலைவர்களாக ஏற்ற முதல் அரசியல் கட்சி நம்முடைய தமிழக வெற்றி கழகம் தான். நமது கட்சியில் இரண்டு பெண் வழிகாட்டுதலில் ஒருவர் வேலு நாச்சியார். மற்றொருவர் அஞ்சலை அம்மாள். இவர்கள் மனதில் நம்மை விட வேகமானவர்கள். விவேகம் ஆனவர்கள் என்று சொல்ல வேண்டும். அவர்களை மாதிரி நாம் செயல்பட வேண்டும்.
சொல் முக்கியமல்ல. செயல்தான் முக்கியம். மாற்று அரசியல் மாற்று சக்தி என்பதையெல்லாம் நாம் செய்யப்போவது இல்லை. நான் ஒரு முடிவோடு தான் வந்திருக்கேன். பின்வாங்கப் போவதில்லை. இந்த முடிவு நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல. நாங்கள் எடுத்த முடிவு. எதற்கும் நம்முடன் தைரியமுடன் சக்தியாய் நிற்கிற மக்களுடன் எடுத்த முடிவு. குடும்பமாய் கூட்டமாய் ஏமாற்ற வந்த கூட்டம் இது அல்ல. பவரை கையில் வைத்துக்கொண்டு தனக்கு அடிபணியாதவர்களை பகையை தீர்க்க வந்த கூட்டம் இல்லை. பக்கா பிளானோடு வந்த கூட்டம். இங்கே ஒரு கூட்டம் நீண்ட காலமாக ஒரே பாட்டை பாடிக்கொண்டு யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது ஒரு சாயத்தை பூசிக்கொண்டு பூச்சாண்டி காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அவர்களுக்கு எப்போது பார்த்தாலும் பாசிசம்.. பாசிசம் அவ்வளவுதான். ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் சிறுபான்மை பெரும்பான்மை என பாகுபாடு காட்டி பிரிப்பது ஒரு வேலையாகி விட்டது. பாசிசம் எனில் நீங்கள் என்ன பாயாசமா? நீங்களும் அவர்களுக்கு கொஞ்சம் கூட சளைக்காதவர்கள் தானே. ஏனெனில் எங்கள் கோட்பாடு பிறப்பால் சமம் என்பதுதான். அது திராவிட மாடல் என தந்தை பெரியார் அண்ணா பெயர்களை கொண்டு தமிழகத்தை சுரண்டி கொள்ளை அடிக்கிற ஒரு குடும்ப சுயநல கூட்டம் தான் நமது அடுத்த அரசியல் எதிரி. கூத்தாடி என்பது கெட்ட வார்த்தையா கூத்து என்பது சாதாரண வார்த்தை அல்ல. கூத்து சத்தியத்தை பேசும். சாத்தியத்தை பேசும். கொள்கை கோட்பாடு சோகம், கோபம் என அனைத்தையும் பேசும். மக்கள் மத்தியில் ஒரு டீசன்டான அரசியல் செய்ய தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என விஜய் கூறியுள்ளார்.