
இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இனி ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பள்ளிகளின் தேர்வு முடிவு அறிவிப்பதில் தாமதம், உயர்கல்வியில் சேர்வதில் மாணவர்களின் தடுமாற்றம் மற்றும் மாணவர்களின் உடல் நலன் பாதிப்பு உள்ளிட்ட சில தனிப்பட்ட பிரச்சனைகளால் தவிப்பவர்களுக்கு பேர் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் ஜூலை -ஆகஸ்ட், ஜனவரி -பிப்ரவரி என இரு சேர்க்கை சுழற்சிகள் நடைமுறைக்கு வருகின்றன. உலக அளவில் முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்த வகையிலான ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை நடைமுறையை ஏற்கனவே பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.