
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, புதிய கல்வியாண்டு தொடங்கும் காலத்தில், பெரும்பாலான மாணவர்களுக்கு பஸ்பாஸ் இப்போதும் வழங்கப்படவில்லை.
அதனால், மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட பஸ்பாஸ் அல்லது புகைப்படம் உள்ள பழைய அடையாள அட்டை வைத்திருந்தாலே போதும். அதுவும் இல்லையெனில், பள்ளி சீருடை அணிந்து இருந்தாலே மாணவர்கள் அரசுப் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்கலாம்” என்றார்.
இந்த அறிவிப்பு, பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம், பள்ளி தொடக்கக் காலங்களில் மாணவர்கள் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த முறையில், மாணவர்களுக்கு இழப்பில்லாமல் சீரான பள்ளி தொடக்க அனுபவத்தை அரசு உறுதி செய்துள்ளது.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக, பள்ளி திறக்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதனை கண்காணிக்க, மாவட்டங்களின் பேரில் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.