
கள்ளக்குறிச்சி மாவட்டம் வி.கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு தனது குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை போட்டு வந்தார். நேற்று மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ராமசாமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு சிகிச்சை முடித்துவிட்டு குடும்பத்தில் உள்ள பிரச்சனையை நினைத்து ராமசாமி அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. இதனால் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே ஏமாப்பேர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி இருக்கும் விவசாய கிணற்றில் குதித்து உயிரிழந்ததாக தெரிகிறது.
அந்த வழியாக சென்ற சிலர் கிணற்றில் சடலம் மிதப்பதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் ராமசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமசாமி தற்கொலை தான் செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.