
மழைநீர் சாலையில் சிதறியதற்காக ஏற்பட்ட கோபத்தில், ஒரு நபர் மற்றொரு நபரின் மோதிர விரலை கடித்து காயம் ஏற்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஜெயந்த் சேகர் என்ற நபர் விரலுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதற்காக ரூ.2 லட்சம் வரை மருத்துவ செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில், பெங்களூரு மகாடி சாலைக்கு அருகே உள்ள லூலூ மால் அண்டர்பாஸ் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
ஜெயந்த் சேகர், தனது மனைவி பர்வதி மற்றும் மாமியாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தது. அவர் காரில் திரும்ப முயன்ற போது, மழைநீர் எதிர்பாராமல் அருகிலிருந்த மற்றொரு காரில் இருந்த பெண் மீது தெரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபமடைந்த கார் ஓட்டுநரும், அவரது மனைவியும், சேகர் கார் அருகே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நபர் சேகரின் வலது கை மோதிர விரலை கடித்துவிட்டார்.
சம்பவம் தொடர்பாக, சேகரின் மனைவி காவல்துறையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் புகார் பதிவு செய்துள்ளார். இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
போலீசார் இருவரும் சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதால், இன்னும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் தற்போது வரை குற்றவாளி தரப்பில் எந்தவொரு எதிர் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.