கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தனது தங்கை சுமித்ராவை 12 வருடங்களுக்கு முன்பு மரசனி கிராமத்தில் வசித்து வந்த குருமூர்த்தி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்து தம்பதிகள் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது குடும்பத்தினர் சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். கடந்த மாதமும் தம்பதி இடையே தகராறு ஏற்பட சுமித்ரா தனது அண்ணனின் வீட்டிற்கு வந்து விட்டார். அதன் பிறகு கணவன் அழைத்தும் அவர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு முறை குருமூர்த்தி சதீஷ் வீட்டிற்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். அதன் பிறகு சதீஷ் வீட்டின் முன்பு ஏதோ ஒரு விலங்கை பலி கொடுத்து ரத்தத்தை குருமூர்த்தி தெளித்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது வீட்டிற்கு மாந்திரீகம் செய்து ரத்தத்தை தெளித்து இருப்பதாக குருமூர்த்தி மீது சதீஷ் பனகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்த காவல்துறையினர் குருமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.