பத்திரப்பதிவு துறை தலைவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களில் கோரிக்கையை ஏற்று ஆவண பதிவு காண கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது ஆனி மாதத்தில் சுபமுகூர்த்த தினமான நாளை 27.6.2025 அன்று அதிகளவு பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. எனவே நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு நூற்றுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.

அதிக அளவு ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் கூடுதலாக 4 தக்கல் முன்பதிவு டோக்கன்களும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.