
சென்னை மாவட்டம் செம்பியம் பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் Chatting App Global Market, Spreatex Market Trading என்ற செயலியில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்ததை நம்பி டில்லிபாபு தனது சுய விவரங்களை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து மர்ம நபர்களின் அறிவுரைப்படி டில்லி பாபு 18 லட்சத்து 52 ஆயிரத்து 130 ரூபாய் பணத்தை செயலியில் முதலீடு செய்துள்ளார். இதேபோன்று தன்னுடைய தாய் பானுமதிக்கும் ரூபாய் 4,20,304 முதலீடு செய்துள்ளார். மொத்தமாக 22,72,434 முதலீடு செய்துள்ளார். ஆனால் டில்லிபாபுவால் முதலீடு செய்த பணத்தை திரும்பி பெற முடியவில்லை.
இதனால் ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லிபாபு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோசடி செய்த நபரின் மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றின் மூலம் போலீசார் விசாரணை நடத்தியதில் உத்தண்டி பகுதியை சேர்ந்த முத்துமாணிக்கம்(55) என்பவர் மோசடி செய்தது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.