
தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் வாராந்திர குளிர்சாதன சிறப்பு ரயில் சேவை, பயணிகள் வசதிக்காக ஜூன் 13-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி செல்லும் (ரயில் எண்: 06035) ரயிலும், திருவனந்தபுரத்திலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3.25 மணிக்கு தாம்பரம் நோக்கி செல்லும் (ரயில் எண்: 06036) ரயிலும் முறையே ஜூன் 13 மற்றும் ஜூன் 15 வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் ரத்து அறிவிப்பு:
ஜூன் 13-ஆம் தேதி இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை காட்பாடி ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அதே தினம் திருப்பதியிலிருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடிக்கு இயக்கப்படும் மெமு ரயிலும், இரவு 9.10 மணிக்கு காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், ஜூன் 13-ஆம் தேதி கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை நோக்கி செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மெமு பயணிகள் ரயிலும் இயக்கம் இல்லாமல் இருக்கும்.
பகுதி ரத்து:
ஜூன் 13-ஆம் தேதி அரக்கோணத்திலிருந்து இரவு 9 மணிக்கு காட்பாடி நோக்கி செல்லும் மெமு பயணிகள் ரயில் சேவூரில் நிறுத்தப்படும். அதேபோல் விழுப்புரத்திலிருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி நோக்கிச் செல்லும் ரயில் வேலூரில் நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.