விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பக்தர்கள் நான்கு நாட்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மேலும் காய்ச்சல் சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அதோடு 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது.

இதனையடுத்து காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதோடு இரவு நேரங்களில் மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.