
மும்பை நகரத்தில் மன அழுத்தம் மற்றும் நிதிச் சிக்கலால் பாதிக்கப்பட்ட முஜாஹித் என்ற இளைஞர், வீடியோ அழைப்பின் போது தாயின் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த இந்த இளைஞர், தற்போது மும்பையில் தனியாக வசித்து வந்துள்ளார். வீடியோ அழைப்பில், “மகனே… தயவுசெய்து இது செய்யாதே… அப்பா இரண்டு நாளில் வருவார்…” என்று தாயார் கண்ணீருடன் வேண்டியபோதும், அவர் தனது தாயின் அழுகையும் கோரிக்கையையும் புறக்கணித்து, அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். குடும்பத்தினர் கூறுவதில், முஜாஹித் மிகவும் புத்திசாலி, மரியாதைக்குரிய இளைஞராக இருந்தார். யாருடனும் வாக்குவாதம், தகராறு இல்லாமல், எப்போதும் புன்னகையுடன் இருந்தவர் என்று தெரிகிறது. இருப்பினும், சமீப காலமாக அவர் கடன்கள் மற்றும் நிதிச் சிக்கலால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். இவை எல்லாம் சேர்ந்து அவரை தற்கொலை செய்யத் தூண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் முஜாஹித்தின் உடலை பெற்றுக்கொள்வதற்காக அவரது குடும்பம் மும்பைக்கு பயணித்துள்ளது. அவரின் இறுதிச் சடங்குகள் ஜோத்பூரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.