குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள சாது வாஸ்வானி சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபல உணவகத்தில் மூன்று இளைஞர்கள் இலவசமாக உணவு பெறக் கூடிய சூழ்நிலையை உருவாக்க திட்டமிட்டு, உணவகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர்.

தங்களது தலைமுடியிலிருந்து முடியை வெட்டி உணவில் போட்டபின், உணவில் முடி இருப்பதாக குற்றம் சுமத்திய சம்பவம் சிசிடிவி காட்சியால் அம்பலமானது.

அந்த இளைஞர்கள் உணவில் முடி இருப்பதாகக் கூறி, ஹோட்டல் ஊழியர்கள் சுத்தமாக வேலை செய்யவில்லை எனக் குற்றம் சுமத்தியதுடன், பில் கட்ட மறுத்தனர். இதைவிடவும் ஒரு இளைஞர், தலைமுடியின் டிஎன்ஏ பரிசோதனை செய்யட்டும் என சத்தமிட்டதுடன், உணவக மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, உணவக மேலாளர் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, உணவில் முடியை இளைஞர்களே நுழைத்தது தெளிவாகப் பதிவாகியிருந்தது. உணவக ஊழியர்கள் தலையில் தொப்பி அணியவில்லை என்பதைக் கண்டதும் இளைஞர்கள் திட்டமிட்டு நாடகம் ஆடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செயல்கள் அனைத்தும் ஹோட்டலில் உள்ளவர்களுக்கு சலசலப்பை ஏற்படுத்தியதுடன், பின்னர் அந்த இளைஞர்கள் தங்களது தவறை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளனர்.