உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் புரோலி பரத்வாஜ் தனது சீருடையில் எடுத்த சமூக ஊடக வீடியோக்கள் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. அந்த வீடியோக்களில் ஒன்று, காவல் நிலையத்தில் வந்த புகார்தாரரின் குழந்தையுடன் விளையாடும் காட்சியுடன் ‘ஹயே மேரா தில் சுரா கே லே கயா’ என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. மற்றொரு வீடியோவில், கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற இடங்களில் அவரது வீடியோக் கிளிப்புகள் சேர்த்து உருவாக்கப்பட்ட ‘ரீல்’ பகிரப்பட்டிருந்தது. இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, மாவட்ட காவல் துறையை அதிர்ச்சி அடைய வைத்தன.

இது தொடர்பாக, போலீஸ் விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவுரையா எஸ்.பி அபிஜீத் ஆர் சங்கர், துறை ரீதியான விசாரணையை உத்தரவு செய்துள்ளார். காவல் துறையின் விதிகளின்படி, பணியின் போது, குறிப்பாக சீருடையில் சமூக ஊடகங்களில் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை மீறியதாகக் கூறப்படும் பெண் காவலருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். தொடர்ந்து பல வீடியோக்களை பதிவேற்றி வருவதும், பார்வைகளையும் புகழையும் பெருக்க முயற்சி செய்ததுமே இச்சர்ச்சைக்கு காரணம் என கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம், காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக ஊடக ஒழுங்குமுறைகள் மீதான கவனத்தை மீண்டும் ஒருமுறை ஈர்த்துள்ளது. விசாரணை முடிவில் வரும் அறிக்கையின் அடிப்படையில், பெண் காவலருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.