
சென்னை சோளிங்க நல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி வீட்டுமனை நிலத்தை, அவர் இறந்த 7 மாதங்களுக்கு பின் போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து அந்நிலத்தை சிலர் தனியாருக்கு விற்பனை செய்து உள்ளனர். இதுகுறித்து சலபதியின் வாரிசுதாரர்களுக்கு தெரியவந்த நிலையில், சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் புகாரளித்தனர். இதனிடையே போலி பத்திரப் பதிவு பற்றி புகார் வந்தால் அதனை விசாரித்து போலி என்பது கண்டறிந்தால், அந்த பத்திரப் பதிவை ரத்துசெய்ய அதிகாரிக்கு உத்தரவிட மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. சென்ற 2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்திருத்ததின் படி சலபதியின் வாரிசுகள் மீண்டும் புகாரளித்தனர்.
எனினும் அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் போலி பொது அதிகார பத்திரத்தின் படி பதிவுசெய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சலபதியின் மகன் சுதாகரராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் முதலில் அளித்த புகாரின் படி விசாரணை துவங்கப்பட்டு விட்டதாகவும், சட்டத்திருத்ததுக்கு பிறகு அளித்த 2-வது புகாரின்படி விசாரணை நடத்தி உரிய காலத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சொத்துக்கள் மோசடியாக எப்படி அபகரிக்கப்படுகிறது என்பதற்கு இவ்வழக்கு ஒரு உதாரணம் என நீதிபதி குறிப்பிட்டார். அதோடு இதுபோன்ற செயல்களை தடுப்பதற்கு உயர்நீதிமன்றம் யோசனையின் படி நாட்டிலேயே முதன்முறையாக தமிழக அரசு, போலியான பத்திரப் பதிவுகளை ரத்துசெய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். அதுமட்டுமின்றி மனுதாரரின் புகாரை விசாரணை மேற்கொண்டு 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.