ஐபிஎல் 2026 கால்பந்து தொடரின் 13-ஆவது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, தனது அணியின் பந்துவீச்சாளர்களை மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கடுமையாகச் சாடியுள்ளார். போட்டிக்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா கூறியதாவது,

“பவர்பிளே ஓவர்களில் நாங்கள் திட்டமிட்டபடி பந்துவீசவில்லை. இதற்கான முழுப் பொறுப்பையும் பந்துவீச்சாளர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ராஜஸ்தான் பேட்டர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எங்களது பந்துவீச்சு தரமானதாக இல்லை. இந்தப் போட்டி முடிவுக்கு பேட்டிங்கை நான் ஒருபோதும் குறை சொல்லமாட்டேன்.

டி20 கிரிக்கெட்டில் சில ‘சரியான பந்துகளை’  வீசுவது மிக முக்கியம். இன்றைய ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளோம். ஒருவேளை நாங்கள் இன்னும் ஐந்து பந்துகளைச் சரியாக வீசியிருந்தால், இந்த 27 ரன்கள் வித்தியாசம் வந்திருக்காது; போட்டியிலும் நாங்கள் நீடித்திருப்போம்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முதல் சில ஓவர்களிலேயே தங்களுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, மும்பையை ஆட்டத்திலிருந்து வெளியேற்றிவிட்டதாக ஹர்திக் ஒப்புக்கொண்டார். தொடக்கம் முதலே நாங்கள் பின் தங்கியே இருந்தோம். கடைசி வரை அந்தப் பின்னடைவைச் சரிசெய்யவே போராடினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலக்கை எட்ட முடியாமல் போனது என்றார் அவர்.

ராஜஸ்தான் அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ஹர்திக் வெகுவாகப் புகழ்ந்தார். “15 வயது சிறுவன் இவ்வளவு பயமின்றி விளையாடுவதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. போட்டிக்கு முன்பே அவரைப் பற்றி நிறைய ஆலோசித்தோம். அவரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் தைரியம் அபாரமானது. அவருக்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்தார். மேலும் அடுத்த போட்டியில் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்தப் போட்டியில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, பலமாக மீண்டு வருவோம் என ஹர்திக் நம்பிக்கை தெரிவித்தார்.