
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கோழி பண்ணை உள்ளது. இங்கு மேற்கு வங்காளத்தை சேர்ந்த சஷாந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடன் அவருடைய மனைவி லிவிகா மற்றும் 4 வயது மகன் அபிஷேக் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சஷாந்தின் மைத்துனர் மகன் ஒருவன் கோழிப்பண்ணை உரிமையாளரின் நாட்டு துப்பாக்கியை பொம்மை துப்பாக்கி என நினைத்து எடுத்து விளையாடினான்.
அந்த துப்பாக்கியை வைத்து சுட்டதில் சிறுவன் அபிஷேக் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினான். இதில் ஒரு குண்டு லிவிகா மீதும் பாய்ந்தது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவன் மற்றும் அந்த துப்பாக்கியின் உரிமையாளர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.