தமிழகத்தில் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்யா பால் மற்றும் தயிர் விலை நாளை முதல் அதிரடியாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆரோக்யா பால் அரை லிட்டருக்கு 2 ரூபாயும், ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. கோடை மழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் பால் உற்பத்தி கடுமையாகச் சரிந்துள்ளதும், கறவை மாடுகளுக்கான தீவனங்களின் விலை உயர்வுமே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
பால் விலையைத் தொடர்ந்து, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான தயிர் விலையையும் ஹட்சன் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஆரோக்யா மற்றும் ஹட்சன் தயிர் அரை லிட்டருக்கு 2 ரூபாயும், ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
