சென்னையிலிருந்து சுமார் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு ஆண்டு தீபாவளி மற்றும் பொங்கல் முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று வருவார்கள். அதில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வது வழக்கம். சுமார் 120 நாட்களுக்கு முன்னரே பயணிகளின் வசதிக்காகவும் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். வருகிற 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமை போகி பண்டிகை வருகிறது. 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15-ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 16-ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதனால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த மாதம் 12-ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ஜனவரி 10-ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள் செப்டம்பர் 12-ஆம் தேதியும், ஜனவரி 11-ஆம் தேதி பயணம் செய்யும் பயணிகள் 13-ஆம் தேதியிலும், ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள் 14-ஆம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் 15-ஆம் தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.