தெலுங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத் நகரம் அருகே அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த  மௌனிகா என்பவர், புபாலப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சுவாமியுடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். இந்த ஆன்லைன் நட்பு, கள்ளக்காதலாக  மாறியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக சுவாமி, ஏற்கனவே விவாகரத்தான மௌனிகாவின் வீட்டில் தங்கியிருந்தார். இது அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களது நடத்தை சமூக ஒழுங்குக்கு எதிரானது எனக் கூறி ஊர்மக்கள் கோபமடைந்தனர்.

 

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் இருவரையும் கயிறுகளால் கட்டி வீதியில் இழுத்து வந்து அவமானப்படுத்தினர். மேலும், சுவாமியின் மீது ‘தூய்மைப் பரிசுத்தம்’ என்ற பெயரில் ஒரு சடங்கு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் போலீசாரிடம் புகார் அளிக்காமல் தாங்களாகவே தீர்வு காண முயன்றுள்ளனர் என்பது கவலைக்குரிய விஷயம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வுக்குப் பிறகு, இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மௌனிகா மற்றும் சுவாமிக்கு நேர்ந்த அவமானகரமான சம்பவம் குறித்து நீதிகரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களை அவமானப்படுத்திய ஊர்மக்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

சமூக ஒழுங்கை பேணவேண்டும் என்ற காரணத்தால் இந்த செயல் ஏற்பட்டதாக சிலர் கூறினாலும், இது தனிநபரின் உரிமையை மீறியதாகவும் மனிதநேயமற்றதாகவும் பல தரப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.