ஒடிசாவின் காமாக்யநகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் எம்.எல்.ஏ. பிரசன்னா படநாயக் (வயது 74) இன்று காலை புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்தார்.

நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், வியாழக்கிழமை உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1977ஆம் ஆண்டு, ஜனதா கட்சி சார்பில் காமாக்யநகரில் இருந்து முதல் முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 1980 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

பின்னர், 1985இல் பாஜகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்.எல்.ஏ என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெற்றவர். ஆனால், அவர் 1990இல் பாஜகவிலிருந்து விலகி ஜனதா தளத்தில் இணைந்தார். அப்போதும் அவர் மூன்றாவது முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் மட்டுமின்றி, கல்வி முன்னேற்றத்திலும் முக்கிய பங்காற்றிய படநாயக், காமாக்யாநகரில் 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நிறுவ உதவியுள்ளார். குறிப்பாக, காமாக்யாநகர் மகளிர் கல்லூரி, பிரஷாலா பிராந்தியக் கல்லூரி மற்றும் புபன் மகளிர் கல்லூரி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

அவரது இறுதிச் சடங்குகள், பூரியில் உள்ள சுவர்கத்வாரில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு, ஒடிசா அரசியல் வரலாற்றில் ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.