
ஓசூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை, தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிப்பது ஆகியவற்றை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக தன்னிச்சையாக போராட்டம் செய்வோம். ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்விக் கொள்கை மற்றும் தொகுதி சீரமைப்பு ஆகியவற்றால் நாடு வளர்ந்து விடும் என்பது எல்லாம் வேடிக்கையாக தான் உள்ளது. தேர்தலில் சீர்திருத்தம் செய்வது அதிகமான வேலையாக உள்ளது. எலக்ட்ரானிக் வாக்கு பதிவு முறையை ஒழித்துவிட்டு வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்க வேண்டும். ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒரு பதவியில் உள்ளவர் மற்றொரு பதவிக்கு போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். இடைத்தேர்தல் முறையை முற்றிலும் நீக்க வேண்டும். மத்தியில் ஆளும் எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள வளங்களை சுரண்டிவிட்டு நிதி தர மறுக்கின்றனர். உரிமை என்று வரும்போது முற்றிலும் மறுத்து விடுகிறார்கள். இதனை மனதில் வைத்துக் கொண்டு தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது. தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை என்று புலம்புவதை விட வரி செலுத்த மாட்டோம் என்று கூறவேண்டும். பிரச்சனை என்றால் ரொட்டி துண்டுகள் மக்களுக்கு வீசப்படுகிறது. மக்களை எப்போதும் பதற்றமாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். எனவே தான் புரட்சி செய்ய வேண்டும் என அழைக்கின்றேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.