உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சௌபேப்பூர் காவல் நிலையத்தில், பெண் புகார்தாரர் ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் ரோஷ்னி சரமாரியாக அறைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது குறையைத் தீர்க்கக் கோரி காவல் நிலையம் சென்ற அந்தப் பெண்ணிடம், மீண்டும் மீண்டும் புகார் அளிப்பதாகக் கூறி ஆத்திரமடைந்த அந்த ஆய்வாளர், அவரைத் தாக்கியதாகப் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் பணியில் இருந்த மற்றவர்கள் தலையிட்டு இந்த மோதலைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த எட்டு வினாடி வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையின் நடத்தை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துச் சாரநாத் ஏசிபி வினய் திவேதி கூறுகையில், வைரலான வீடியோவின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.