துபாயின் புகழ்பெற்ற “டைகர் டவர்” என அழைக்கப்படும் மரினா பினாக்கிள் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 67 மாடிகள் கொண்ட இந்த உயர் கட்டடத்தில் 764 அபார்ட்மெண்ட்கள் உள்ளன, அதில் சுமார் 3,800 மக்கள் வசித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கட்டிடத்தின் கீழ் மாடிகளில் திடீரென தீப்பற்றியது. தொடக்கத்திலேயே தீ வேகமாக பரவிய நிலையில், மீட்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் அபார்ட்மெண்டுகளில் வசித்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். மக்கள் பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மீட்பு பணிகள் சற்று சிக்கலாக இருந்தது. இருப்பினும் தீவிர முயற்சியின் மூலம் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கட்டடத்தின் பல மாடிகளில் தீ பரவியதால், மொத்த கட்டிடமும் எரிந்தது. துபாய் சிவில் பாதுகாப்பு படை 6 மணி நேரம் போராடிய பிறகு, தீயை கட்டுப்படுத்த முடிந்தது.

தீ அணைக்கப்பட்ட பிறகு, உள்ளே யாராவது சிக்கியிருக்க வாய்ப்புண்டா என்பதை உறுதிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்த கட்டிடத்தின் உடைமை மற்றும் வசிப்பிடம் சார்ந்த ஆவணங்கள், பொருட்கள் பல தீக்கிரையாகியுள்ளன. குடியிருப்பில் வசித்து வந்த மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. துபாய் அரசு மற்றும் மீட்பு துறைகள் இது தொடர்பான விசாரணைகளை தொடங்கியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மற்றும் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் புகழ்பெற்ற இந்த உயர் கட்டடம் முழுமையாக தீக்கிரையானது வரலாற்றிலேயே மிகப்பெரிய நகர் நெருப்பு சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.