மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் இருந்து தபோவன் எக்ஸ்பிரஸ் ரயில் பூனே நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மன்மார்ட் ரயில் நிலையத்தை நெருங்கிய போது பயணிகள் அபாய சங்கலியை பிடித்து இழுத்ததால் அவசரமாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரயில்வே கார்டு வந்து விசாரித்த போது மூன்றாவது பெட்டியில் இருந்து பயணி ஒருவர் கீழே விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கீழே விழுந்த பயணியை மீட்க ரயிலை பின்னோக்கி கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதனால் மன்மாட் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ரயிலை பின்னோக்கி கொண்டு செல்ல ஒப்புதல் கேட்டனர்.

எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பின்னால் சரக்கு ரயில் ஒன்று வந்தது. உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்த ரயிலை தொடர்பு கொண்டு சரக்கு ரயில் நிறுத்தினர். இதனை தொடர்ந்து தபோவன் எக்ஸ்பிரஸ் ரயில் பின்னோக்கி 700 மீட்டர் தூரம் இயக்கப்பட்டது. கீழே விழுந்த பயணி கண்டுபிடிக்கப்பட்டார். அவரை சக பயணிகள் ரயிலில் மீட்டனர். பின்னர் மன்மாட் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸில் அந்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சர்வார் ஷேக் என்பது தெரியவந்தது. ரயிலில் இருந்து கீழே விழுந்ததால் தலையில் படுகாயம் ஏற்பட்டு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.