
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் கடந்த திங்கட்கிழமை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அதாவது 4 வயது சிறுமியை கிஷோர் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலியல் குற்றவாளியான கிஷோர் தலைமறை வாகிவிட்ட நிலையில் அவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் மடக்கேஞ்ச் என்ற பகுதியில் கிஷோர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் சஹினா கான் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காவல்துறையினர் தீவிரமாக தேடிய நிலையில் திடீரென கிஷோர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட முயற்சி செய்தார்.
உடனடியாக சஹினா கான் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டார். இதில் கிஷோரின் காலில் குண்டு பாய்ந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பாலியல் குற்றவாளியை சப் இன்ஸ்பெக்டர் சுட்டு பிடித்தது அந்தப் பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.