
வேலூர் மாவட்டத்தில் உள்ள கன்னியம்பாடி பெரியம்பாலா பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி என்ற தங்கை உள்ளார். இருவரும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கமாக பார்த்திபன் தனது தங்கையை வேலைக்கு அழைத்துச் செல்வார். இந்த நிலையில் காட்பாடி சாலையில் தர்மராஜா கோவில் அருகே சென்ற போது குடிநீர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அஸ்வினி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அஸ்வினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.