
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. நான் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கிறேன் என்று கூறிய போதிலும் அவர் நம்பாமல் எழுதிக் கொடுங்கள் என்று கூறுகிறார்.
இதனால் இனி நீயா நானா என்று பார்த்துவிடலாம் என முடிவு செய்துவிட்டேன். குருவை மிஞ்சிய சிஷ்யன் இருக்கலாம் ஆனால் தந்தையை மிஞ்சிய மகன் இருக்கக்கூடாது. எனவே நீதி, நேர்மை மற்றும் தர்மத்தின் படி இனி நான் தான் தலைவர். இன்னும் ஒரு சில வருடங்கள் எனக்கு தலைவராக இருக்க உரிமையில்லையா.?
அரசியலில் வாரிசு என்பது கிடையாது. எனவே நான் எனக்கு பிறகு கட்சியை யாரிடம் வேண்டுமானாலும் ஒப்படைப்பேன். கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாகவே நான் கட்சியை பார்த்துக் கொள்கிறேன் என்று அன்புமணி கூறிய நிலையில் அவர் கூறியதற்கான அர்த்தம் தற்போது தான் எனக்கு புரிகிறது. அன்புமணி கட்சியை வளர்க்கவும் உழைக்கவும் தயாராக இல்லை. யார் என்ன சொன்னாலும் அன்புமணி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார் என்பதால் தேர்தல் முடியும் வரையில் நான் தான் தலைவர்.
கூட்டணி குறித்தும் நான் மட்டும்தான் முடிவு செய்வேன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என நினைப்பவர் அன்புமணி என்றார். மேலும் அன்புமணியின் மூன்று வருட தலைவர் பதவிக்கான காலம் முடிவடைந்துவிட்டது எனவும் அதிரடியாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மேலும் பாமக பொது செயலாளர் வடிவேல் இராவணனை கண்டுபிடித்து தாருங்கள். அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 100 ரூபாய் பரிசு தரப்படும். அவரை கடத்தி சென்று பைவ் ஸ்டார் ஹோட்டலில் வைத்திருப்பதாகவும் அங்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நான் கேள்விப்பட்டேன். எனவே அவரை கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறினார்.