14 வயதே ஆன இந்திய கிரிக்கெட்டின் இளைய புயல் வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்தில் ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோவில் கலந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் காமெடியன் பிரனீத் மோர், பாகிஸ்தான் வீரர்களையும் குறிப்பாக பாபர் அசாமையும் பங்கமாக கலாய்த்தார். “வைபவ் ஏற்கனவே பாகிஸ்தான் பவுலர்களை மைதானத்தில் பிரித்து மேய்வதால், நான் அவரை ரோஸ்ட் செய்ய மாட்டேன்” என்று பிரனீத் சொல்ல, வைபவ் சிரிப்பில் ஆழ்ந்தார். மேலும், பாபர் அசாமின் ஸ்லோ பேட்டிங்கை கிண்டல் செய்த பிரனீத், “அவருக்கு கொஞ்சம் காம்ப்ளான் கொடுங்கப்பா, அப்பவாது ஸ்ட்ரைக் ரேட் ஏறுதான்னு பார்ப்போம்” என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.

​அண்டர்-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசி இந்தியாவுக்கு 6-வது முறையாக கோப்பையை வென்று கொடுத்த வைபவ், இப்போது தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கவுள்ளார். வரும் பிப்ரவரி 17-ம் தேதி முதல் அவருக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அவர் படிக்கும் போடார் சர்வதேசப் பள்ளியின் முதல்வர் நீல் கிஷோர் இதுபற்றி கூறுகையில், “இது கிரிக்கெட் பிட்ச் கிடையாது, படிப்புக்கான பிட்ச். வைபவ் உலகக்கோப்பை ஹீரோவாக இருந்தாலும், தேர்வில் அவருக்கு எந்தச் சலுகையும் கிடையாது; மற்ற மாணவர்களைப் போலவே அவரும் நடத்தப்படுவார்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.