அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 25 வருடங்களாக நான் ராயபுரத்தில் முடி சூடா மன்னனாக இருந்த நிலையில் நான் தோல்வி அடைந்ததற்கு பாஜக தான் காரணம் எனவும் அவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக படுதோல்வியை சந்தித்தது எனவும் கூறினார். அதோடு பாஜக ஒரு ஓடாத பழைய வண்டி எனவும், அவர்களை நேரம் பார்த்து தான் கழட்டிவிட்டதாகவும் மீண்டும் இணைக்க வாய்ப்பே கிடையாது என்றும் கூறினார்.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதன் காரணமாக ஜெயக்குமார் அதிமுகவிலிருந்து விலகுவதாக கூறப்பட்டது. சமீபத்தில் டெல்லிக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்தபோது கூட ஜெயக்குமாரை அழைத்து செல்லவில்லை. இதேபோன்று கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போதிலும் ஜெயக்குமார் அங்கு இல்லை. இதன் காரணமாக அவர் அதிமுகவிலிருந்து விலகுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

நான் பாஜக உடன் கூட்டணி அமைத்தால் அதிமுக கட்சியில் இருந்து விலகுவேன் என்று எந்த இடத்திலும் கூறாத நிலையில் திட்டமிட்டு வேண்டும் என்று பொய் செய்திகளை சிலர் பரப்புகிறார்கள். என்னுடைய உயிர் மூச்சு அதிமுக தான். எனவே பதவிக்காக நான் யார் வீட்டு வாசலுக்கும் போகமாட்டேன். என்னுடைய குடும்பம் பதவிக்காக யார் வீட்டு வாசலுக்கு போய் காத்து கிடந்தது கிடையாது. மேலும் எப்போதுமே அதிமுகவில் மட்டும்தான் இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் அதிமுகவிலிருந்து விலகுவதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்பது தெளிவாகிவிட்டது..