தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி களம் காணும் நிலையில் அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாஜக கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற திட்டமிட்டதாக செய்திகள் வெளியானதோடு தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.

தற்போது பாஜக தீவிர களப்பணியை தேர்தலுக்காக தொடங்கியுள்ள நிலையில் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை பாஜகவில் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களில் பாஜக தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க முயற்சி செய்து வரும் நிலையில் தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் தென் மாவட்டத்தில் பாஜக செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஜகவில் இணைந்துள்ளார். அதன்படி ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி ராஜா தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 5000 பேர் நேற்று நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். மேலும் ஏராளமான இளைஞர்களும் பாஜகவில் இணைந்துள்ளதாக  பாஜக தங்களுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.