பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடர் தொடங்கியுள்ள நிலையில், பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, கடும் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வாழ்நாள் தடை உள்ளிட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளார். அதாவது 2026-ஆம் ஆண்டுக்கான பி.எஸ்.எல் தொடக்க விழாவில் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தச் சூழலில், நசீம் ஷாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு வெளியானது. அதில், முதல்வருக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவத்தைக் கேள்வி எழுப்பியதோடு, அந்த வரவேற்பு முறையையும் விமர்சித்திருந்தார். இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டாலும், அதற்குள் அதன் ‘ஸ்கிரீன்ஷாட்கள்’ வைரலாகி பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

கிரிக்கெட் வீரரின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்திலும், கிரிக்கெட் வாரியத்திலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தி வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது, “விளையாட்டு வீரராக இருந்து கொண்டு அரசியல் தலைவர்களை பொதுவெளியில் விமர்சிப்பது விதிமீறலாகும். இது குறித்து பி.சி.பி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. நசீம் ஷாவுக்கு கிரிக்கெட் விளையாட நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன.

இருப்பினும், இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதாக ஒரு தரப்பு ரசிகர்கள் நசீம் ஷாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்போ, உயர்மட்ட விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என விமர்சித்து வருகின்றனர்.

மேலும் புதிய அணிகள் மற்றும் ஏல முறைகளுடன் உற்சாகமாகத் தொடங்கியுள்ள 2026 பி.எஸ்.எல் தொடர், தற்போது இந்த அரசியல் மோதலால் திசைமாறியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.