மத்திய கிழக்கு பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “சர்வதேச சட்ட விதிகளை முழுமையாக மீறிய செயல்” என கூறி, இது மேற்கு ஆசிய பகுதியில் நிலவும் அமைதிக்கு பேராபத்தாக அமையக்கூடும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இந்தக் கண்டனத்தைத் தெரிவிப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வெளியான அமெரிக்க எதிர்ப்பு அறிக்கை, பாகிஸ்தானின் இருமுக அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும், அரசியல் பரப்புரையாக பார்க்கப்படும் எனவும் விமர்சிக்கப்படுகிறது.

ஐ.நா. சாசன விதிகளின் அடிப்படையில், ஈரான் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை பெற்றுள்ளது என்றும், அமெரிக்கா தனது சக்தியை தவறாக பயன்படுத்தும் முயற்சியை பாகிஸ்தான் எதிர்க்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்பதால், உலக நாடுகள் அனைத்தும் அமைதிக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் எனவும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.