பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தின் போது தமிழில் மந்திரம் ஓத நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவின் போது தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், பழனி முருகன் கோவில் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். பழனி முருகன் கோவிலுக்கான குடமுழுக்கு விழாவானது வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ் கடவுள் முருகன் என போற்றப்படும் பழனி முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் மந்திரம் ஓதி நடத்துவது சிறப்பானதாகும். தமிழில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே குடமுழுக்கின் போது மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில் குடமுழுக்குகளிலும் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது பழனி முருகன் கோவிலுக்கும் பொருந்தும். மேலும் தஞ்சை பெரிய கோவிலும் தமிழில் மந்திரம் கூறி குடமுழுக்கை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே அதன் அடிப்படையில் பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கின் போது தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், முருகன் தமிழ் கடவுள் ஆவார். எனவே தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்த தனிநபரும் அரசாங்கத்திற்கு கருத்து கூற வேண்டியது இல்லை. தமிழ்நாடு அரசு பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது எனதெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவின் போது தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்..