
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள கான் யூனிஸில், குழந்தை மருத்துவர் அலா அல்-நஜ்ஜாரின் வீடு இஸ்ரேல் குண்டுவீச்சால் முற்றிலுமாக இடிந்தது. இந்த தாக்குதலில் அவருடைய 10 குழந்தைகளில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் குழந்தைகளின் வயது 7 மாதம் முதல் 12 வயது வரையிலானவர்கள். குடும்பத்தினரின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது. சித்தார், லுக்மான், சாடின், ரெவால், ருஸ்லான், ஜுப்ரான், ஈவ், ரக்கான், யஹ்யா ஆகியோர் இந்தக் கொடூர தாக்குதலில் பலியாகினர்.
மருத்துவர் அலா அல்-நஜ்ஜாரின் கணவரும் இத்தாக்குதலில் படுகாயமடைந்தார். அவருக்கு மார்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
11 வயதான அவர்களின் ஒரே உயிருடன் உள்ள மகனான ஆதாமும் தீவிர சிகிச்சையில் உள்ளார். தாயான அலா, தற்போது மகனும் கணவரும் உயிர் பிழைக்க வேண்டும் என போராடி வருகிறார். அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். “அந்த குழந்தைகளுக்கு எந்த குற்றமும் இல்லை. இவ்வளவு நேர்மையான மருத்துவர், நோயாளிகளை காப்பாற்றுகிறவர். ஆனால் அவர் குடும்பமே இவ்வாறு அழிந்தது” என மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.
காசாவில் கடந்த அக்டோபர் 2023 முதல் இப்போது வரை சுமார் 53,900 பேர் இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்றும், 1.22 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது போன்ற தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.