கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மலைப்பகுதி இருக்கிறது. இங்கு கடந்த 19ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் ஒரு 35 வயது வாலிபரும் 33 வயது இளம்பெண்ணும் சென்ற நிலையில் அவர்கள் மலையின் உச்சிக்கு சென்றனர். அப்போது அங்கு மது போதையில் நான்கு வாலிபர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் நால்வரும் சேர்ந்து அந்த பெண்ணையும் வாலிபரையும் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்ததோடு ரூ. 7000 பணத்தையும் பறித்துக் கொண்டனர். இதை தொடர்ந்து அந்த வாலிபர்களில் 2 பேர்  அந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் மற்ற இருவரும் சேர்ந்து அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கீழே இறங்கி வந்த பிறகு மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டதால் அங்கிருந்தவர்கள் நடந்த சம்பவம் குறித்த கேட்க சொல்லிவிட்டு புகார் எதுவும் கொடுக்காமல் சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று பெண்ணிடம் புகாரை பெற்றுக் கொண்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அபிஷேக் (20), கலையரசன் (21), நாராயணன் (21), சுரேஷ் (22) என்பது தெரிய வந்தது. இதில் நாராயணன் மற்றும் சுரேஷ் ஆகியோர்தான் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதில் அபிஷேக் மற்றும் கலையரசன் ஆகியோரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்த நிலையில் மற்ற இருவரும் பதுங்கி இருக்கும் இடம் தெரிந்து அவர்களை நேற்று கைது செய்ய சென்றனர். அப்போது நாராயணன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் காவலர்கள் விஜயகுமார் மற்றும் குமார் ஆகியோரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதன் காரணமாக குற்றவாளிகளை போலீசார் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.